Sunday, September 24, 2017

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்-6 (தொடர்ச்சி)



விரல் கோர்வை

  திருநாண் பூட்டுதல் முடிந்த பின் மணமகனது வலதுகைச் சுண்டு விரலையும், மணமகளது இடதுகைச் சுண்டு விரலையும் இணைத்து இருவர் கையையும் பட்டுத் துணியால் சுற்றி மண அறையைச் சுற்றி வரச் செய்வர். இப்போது இணையும் கைகள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். சிலப்பதிகாரம் ‘காதலர்ப் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்’ என்று கூறும். சுண்டு விரலில் தான் இதய நாடி ஓடுகிறது என்பர். இரு இதயங்களும் ஒன்றுபட்டன என்பது இதன் பொருள். பின் மண மக்கள் மாலை மாற்றிக் கொள்வர்.

நலங்கிடல்

  பிற சமூகம் போல் நலங்குப் பாடல்கள் பாடுவது கொங்கு வேளாளர் வழக்கம் இல்லை. வெற்றிலையில் குங்குமத்தை வைத்துக் குழைத்து மணமகன் மணமகள் ஒருவர் பிறருக்குப் பொட்டு வைப்பது தான் நலங்கிடல் எனப்படுகிறது. மங்கல வாழ்த்து

 ‘செங்கையினாலே சிகப்பிட்டு இருவருக்கும்’

 என்று கூறும்.

குலம் கோதுதல்

  இன்ன குலத்தைச் சேர்ந்த இன்னாருடைய பேரன் இன்னாரது மகன் இன்ன குலத்தை சேர்ந்த இன்னாரது பேத்தி இன்னாரது மகளை உங்கள் முன்னிலையில் சூரியர் சந்திரர் சாட்சியாக முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் சாட்சியாக மணம் முடித்துக் கொண்டனர் என்பதே குலம் கோதுதல் ஆகும். குலம் ஓதுதல்தான் – கோதுதலாக மாறிவிட்டது என்பர்.

அம்மி மிதித்து அருந்ததி காட்டல்

  அம்மியைக் கழுவிச் சுத்தம் செய்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வைத்திருப்பர். மணமகள் தன் வலது பாதக் கட்டை விரலை அம்மியில் வைப்பாள். பின் சாலில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் தன் முகத்தைப் பார்ப்பாள். அம்மி போல் உறுதியாகக் கற்புத் தன்மையைக் காப்பேன் என்பது இதன் பொருள்.

  அருந்ததி சப்தரிஷிகளில் ஒருவராகிய வசிட்டர் மனைவி. மும்மூர்த்திகளும் அவள் கற்புத் தன்மையைச் சோதித்தும் நிலை குலையாது இருந்தவள். தன் கணவன் ஐயப்பட நட்சத்திர பதம் பெற்று சப்தரிஷி மணடலத்தின் இடையில் உள்ள வசிட்ட நட்சத்திரத்தின் அருகிலேயே இருக்கும் பேறு பெற்றாள். அருந்ததி பார்ப்பது என் கணவனைப் பிரியாமல் இருப்பேன் என்று மணமகள் உறுதி ஏற்பதாகும். அருந்ததியை வடமீன் என்பர். எப்பொழுதும் அது வடக்கிலேயே இருக்கும். துருவ நட்சித்திரம் என்னும் வடமீன் கடல்பயண மாலுமிகட்கு வழிகாட்டியாக இருப்பது.

‘வடமீன்போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்’
‘வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை’
‘அம்கண் உலகின் அருந்ததி அன்னாளை’

 எனக் கலித்தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம் கூறுகிறது.

அருகு மணம்

  மண அறையில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீரில் உள்ள வெற்றிலையையும், அருகம்புல்லையும் எடுத்துக் கிள்ளி அருமைக்காரர் மணமகனுக்கும், மணமகளுக்கும் பாதம், தோள், தலை இவற்றில் கையை நிறுத்தி மூன்று முறை ஆராதனை செய்வார். இதற்கு ‘அருகு மணம்’ என்று பெயர்.

பரியம் செலுத்தல்

  மணமகன் சார்பில் மணமகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு தொகை பரியம் ஆகும். 37 1/2 ரூபாய், 47 1/2 ரூபாய் என ஊருக்கு ஊர் பலவாறு வேறுபடும். சில இடங்களில் பணத்தோடு அரிசியும் கொடுக்கப்படும். மணமகளுக்குப் பொருள் கொடுத்தே முன்பு திருமணம் நடைபெற்றது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

  மஞ்சள் துணியில் கட்டிக் கொடுக்கப்படும்  பணத்தை முக்காலி வேல் வைத்து எண்ணிப் பார்த்து எவ்வளவு என்று அறிவித்து மணமகள் வீட்டுச் சீர்க்காரப் பெண்ணிடம் இதைக் கொடுக்க அவர் வாங்கிச் சென்று தண்ணீர் நிறைந்துள்ள சாலின் மீது வைத்து மணமகள் வீட்டாரிடம் கொடுப்பர்.

  பெண்ணை இவ்வளவு நாள் செலவு செய்து வளர்த்தமைக்காகப் பெண் வீட்டாருக்குக் கொடுக்கும் தொகை என்றும், மணமகளைத் தொடுவதற்காகக் கொடுக்கும் ஸ்பரிசத் தொகை ‘பரியம்’ என மாறி விட்டதென்றும் கூறுவர். அகப்பொருள் இலக்கியங்களில் இது ‘முலைவிலை’ என்று கூறப்படுகிறது. ‘பரிசு’ என்றும் கூறலாம்.

பாத அணி அணிதல்

  மணமக்கள் மண வீட்டின் வாயிலில் வந்து பண்ணையத்து மாதிகன் எனக் கூறப்படும் மாதாரி அளிக்கும் பாத அணிகளை (செருப்பு) அணிவர். அவருக்கு மனம் குளிரப் பணமும், பொருள்களும் கொடுப்பர். பாத அணிகள் கடையில் வாங்கினாலும் அவரிடம் கொடுத்தே அணிவர். கடை நிலையில் உள்ளாரும் திருமணத்தில் பங்கு பெற வேண்டும் என்பது இதன் பொருள்.

புலவர் பால் சாப்பிடுதல்

  காணிப்புலவருக்கு விருந்தளித்து அதன் பின் மணவீட்டார் தாங்கள் உண்ணும் வெங்கலவட்டிலில் பாலும், பழமும் கலந்து கொடுத்து உண்ணச் செய்வர். புலவருகக்கு தலை, தோள், இடுப்புக்கு 3 ஆடை அளிப்பர். புலவர் பால் சாப்பிடாத வீடு மதிப்புக் குறைந்த வீடாகக் கருதப்படும்
.
கரகம் இறக்குதல்

  இணைச்சீர் நடைபெற்ற இடத்திலும், மண அறையிலும் இருந்த கரகங்களை எடுத்து மூடியைத் திறந்து தாம்பூலம் வைத்து மணப் பெண் வீட்டுக்குக் கொண்டு செல்வர். தண்ணீரைக் கூறைமேல் ஊற்றுவர். நெல் உள்ள கரகத்தை உறியில் வைப்பர்.

  பின் மணமக்களின் கங்கணங்கள் அவிழ்க்கப் பெறும் அதைக் கூறைமேல் எறிவர் அல்லது பாலில் போடுவர்.

பந்தல் களறிச் செலவு

  திருமண ஏற்பாடுகளில் கலந்து கொண்ட அத்துணை குடிபடைகட்கும் தொழிலாளிகட்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப உரிய தொகையை ஒவ்வொருவராக அழைத்து அருமைக்காரரே மணப்பந்தலில் வழங்குவார். பந்தல் போட்டவர், மேளகாரர், நாவிதர், பண்டாரம், பூசாரி, வண்ணார், பறையர், சக்கிலி, மாலைக்காரர், குயவர், ஆசாரி, புலவர், மாணிக்கத்தி என எல்லோருக்கும் பணம் வழங்கப்படும். இதனோடு ஊர்ப்பணமும் வழங்கப் பெறும். அது பழைய கால் ரூபாய் (25 பைசா) தான். உரிமையோடு அதைப் பெறுவர்.

சட்டுவச்சாதம் கலக்கல்

  மணமகனுக்கு மணமகள் அளிக்கும் முதல் உணவாகும். கையில் போடாமல்  இரும்புக் கரண்டி, சட்டுவம் போன்றதாலும் (தோசை திருப்பி போன்றது) அன்னக் கரண்டியாலும் போடுவதால் இப்பெயர் பெற்றது.

  பின்னர் மணமகன் விட்டுக்குப் பெண்ணை முதலில் மணமகன் வீட்டார் அழைத்துச் செல்வர். பெண்ணுடன் அவள் தம்பி செல்வர். பின் பெண் கூட்டி வர மணமகள் வீட்டார் செல்வர். மாலையில் பெண் வீட்டுப் பிள்ளையார் கோயில் புதுப்பாத்திரத்தில் மணப்பெண் பொங்கல் வைப்பார். இது ‘மடைக்கலப் பானைப் பொங்கல்’ எனப்படும்.

சம்பந்தம் கலக்கல்

  திருமணக் கூட்டத்தில் நெருங்கிய உணவினர்களை அறிமுகம் செய்து வைத்து நேரம் இருக்காது. திருமணம் முடிந்து  இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கட்கு மட்டும் விருந்தளிக்கப்படும். இது ‘சம்பந்தம் கலக்குதல்’ எனப்படும்.

தொடர் நிகழ்வுகள்

  குலதெய்வக் கோயில்கட்கும், உள்ளூர் கோயில்கட்கும் ‘கல்யாணப்படி’ என்ற பெயரில் மணமக்களோடு சென்று பூசை செய்து வழிபடுவர். பெண்ணெடுக்கி மாமன்மார்கட்கு விருந்து வைக்க அவர்கள் இல்லங்கட்குச் செல்வர். இணைச்சீர் செய்த சகோதரிக்கு இல்லம் சென்று சிறப்புச் செய்வர். பின் மணமகனுக்கு மணமகள் வீட்டிலும், மணமகளுக்கு மணமகன் வீட்டிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவர்.

  சாந்தி முகூர்த்தம் என்பதைப் பிறருக்கு அறிவித்து  விமரிசையாகச் செய்வது கொங்கு வேளாளர் வழக்கம் இல்லை.

  பல சமூகத்தாரும் திருமணச் சீர்களில் பங்கு பெறுவது கொங்கு வேளாளர் சமூக ஒற்றுமைக்கும், பல குடிமக்களை அவர்கள் கொடை கொடுத்துப் பாதுகாக்கும் தன்மைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

  திருமண வீட்டில் முன்பு மங்கல வாழ்த்துக்குப் பின் புலவரால் கம்பர் பாடிய வாழி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் ஆகியவை படிக்கப்பட்டது. கொங்கு வேளாளர் திருமணங்கள் இலக்கிய மேடையாகத் திகழ்ந்தன.

கொங்கு வேளாளர் திருமண இல்லங்களில் சிறப்பிக்கப்பெறும் பதினெட்டுக் குடியினர்.

தொண்டைமண் டலவரிசை நாலாறு கோட்டமும் 
   சோழநாள் முதலாகவே
சொல்பெரிய நாவிதன் குயவன் வண்ணான் ஓலை
   சொன்னபடி எழுதும்உவச்சன்
கண்டதொரு கண்ணாளர் ஐவர் வாணியர் மூவர்
   கந்தமணி மாலைகாரன்
கலைமீது சரடோட்டு பாணணும் தலைக்குளம்
   காவலாகிய வலைஞனும்
பண்டுமுதலாய் ஊரார்க்குக் கண்டுமே உரைத்திடும்
   பறையனொடு பள்ளனுடனே
பதினெண்பேர் மணவறையில் மாகாணம் அளவுபோய்
   பணிசெய்து பகரும்முறையால்
கொண்டிடும் பரிவட்டம் கட்டியே மிகவாகை
   கூறும் வேளாளருக்குக்
குலவயம் தன்னிலே கச்சி ஏகம்பர்தன்
   குமுதத்தில் இட்டவரியே.
-பழம்பாடல்

❂   ❂   ❂   ❂   ❂   ❂   ❂   ❂  ❂   ❂










.

No comments:

கொங்கு வேளாளர் குலங்கள்

(புலவர் செ.இராசு அவர்களின் நூலிலிருந்து }