Wednesday, September 13, 2017

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்-2 (தொடர்ச்சி)

கூறைப்புடவை எடுத்தல்


  இரு வீட்டுப் பெண்களும் சில ஆடவர்களும், கூட்டமாக ஜவுளிக் கடைக்குச் சென்று மணமகளுக்கு மணமகன் வீட்டுச் செலவில் கூறைப்புடவை எடுப்பர். மணமகனுக்குரிய ஆடைகளை மணமகள் வீட்டார் எடுப்பர். இணைச்சீர், மாமன்மார், கைக்கோர்வைக்காரர் போன்ற சீரோடு தொடர்புடைய அனைவருக்கும் உரியவற்றை எடுப்பர். கூட்டமாகச் செல்லுவது இப்போது குறைந்து விட்டது.

திருமண அழைப்பு

  முன்பு பனை ஓலையில் திருமண அழைப்பை கணக்கர் அல்லது புலவரைக் கொண்டு எழுதி அதன் மூலம் நேரில் அழைப்பவர்களையும், மங்கலன் (நாவிதர்) மூலம் அழைப்பவர்களையும் அழைப்பர். முக்கியமானவர்களை நேரில் அழைப்பர். இதனை மங்கல வாழ்த்து

கற்றோர் புலவர் கணக்கரை அழைத்து
தேன்பனை ஓலை சிறக்கவே வாரி
திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பி
கலியாண நாளைக் கணித்து அறிவித்தார்’
என்று கூறுகிறது.

விருந்து அல்லது சோறாக்கிப் போடுதல்

  திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் விருந்து புதுவிதமானது. திருமணத்தன்று திருமண வீட்டார் இருவரும் எல்லோருக்கும் விருந்தளிப்பார்கள். இந்த விருந்து மணமகளின் சகோதரிகளும், சகோதரி முறை ஆகின்றவர்கள் அனைவரும் மணமகன் வீட்டாருக்கும், மணமகளின் அத்தை, மாமன் முறை ஆகின்றவர்கள் மணமகள் வீட்டாருக்கும் அளிக்கும் விருந்தாகும். விருந்தின் எல்லாப் பொருள்களையும் அவர்கள் வாங்கி வருவர்; அல்லது எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்வர். பெரிய கூட்டத்தை ஒருவரே சமாளிக்க முடியாது என்று உறவினர் செய்யும் உதவியாகும். இந்த விருந்தை சோறாக்கிப் போடுதல்’ என்றும் குறிப்பர்.

பட்டினிச் சாதம்

  மேற்கண்ட விருந்தின் போது மணமகன், மணமகள் உண்ணும் உணவை ஒரு சந்திச் சாப்பாடு என்று கூறுவர். முகூர்த்தத்திற்கு முன் இந்த ஒரு வேளை உணவே அவர்கட்கு வழங்கப்படும். இதைப் பட்டினிச்சாதம்’விரத விருந்து’ என்றும் கூறுவர். அவர்கள் விரதத்தின் பயனை அறியவும் திருமண நாளில் வயிற்றுக்கோளாறு எதுவும் ஏற்படாதிருக்கவும் இவ்வழக்கம் அவசியமானதாகும். இந்த நிகழ்விற்குப் பின் அவர்கள் வெளியில் வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தோழனும், தோழியும்

  திருமண நாட்களில் மணமகன், மணமகள் இருவரும் தோழன், தோழி பொறுப்பில் இருப்பர். மணமகனின் சகோதரி கணவன்மார்களும், மணப்பெண்ணின் நங்கை, கொழுந்திமார்களும் பெரும் பாலும் தோழன், தோழியாக இருப்பர். மணமகன், மணமகளின் எல்லாத் தேவைகளையும் இவர்களே கவனித்துக் கொள்ளுவார்கள். இது சங்க காலத் தலைவி, தலைவர்மார்களின் பாங்கி, பாங்கன் பாத்திரத்தை நினைவூட்டுகிறது.

முகூர்த்தக்கால் போடுதல்



  திருமண நாளின் முதல் நிகழ்ச்சி முகூர்த்தக்கால் போடுவதாகும். அருமைக்காரருடன் மூன்று பேர் சென்று பால்மரமான ஆல், அரசு, பாலை, பாச்சான் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றுக்குப் பூசை செய்து முக்கவர் (கிளை) உள்ள சிறு கொம்பை வெட்டி வந்து தோலைச்சீவி மஞ்சள் பூசி வைத்திருப்பர். அதை மணப்பந்தலில் நீர் மூலை அல்லது ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கில் பந்தல்காலில் ஆண்களும், பெண்களுகமாக ஐந்து அல்லது ஏழுபேர் பிடித்துக் கொள்ள மஞ்சள் தோய்ந்த துணியில் நவதானியத்தைக் கட்டி அருமைக்காரர் பால் வார்த்துப் பூசை செய்து கட்டுவார்கள்.

படைக்கலம் வைத்தல்


  முன்பே வெற்றிலை பாக்கு வாங்கி உறுதி பெற்று மண் பாண்டங்கள் செயது குயவர் திருமண வீட்டு முற்றத்தில் கொண்டு வந்து வைப்பார். மதுக்கரைப் பட்டயம் மிடா 4, தண்ணீர்ச்சால் 1, பெரிய சால் 2, தண்ணீக்குடம் 4, தாளி 4, கரிச்சட்டி 4, உரிச்சட்டி4, நெய்க்கலயம் 2, பெரிய தடச்சட்டி 1, தண்ணீர்க் கலயம் 4 என்று கூறுகிறது.

  குயவர்கட்கு 2 வள்ள அரிசி, 1 வள்ளம் பருப்பு, 8 வட்டுக் கருப்பட்டி, 1/2 படி நெய், 1 பணம் அளிக்க வேண்டும்.

 மடைக்கலப் பானைப் பொங்கலுக்கும் தேவையான மண்பாத்திரமும் அளிப்பர். சுண்ணாம்பு, செஞ்சாயம் பூசி அலங்கரிக்கப்பட்ட அவை எழுத்துப்பானை’ எனப்படும்.

  ஆசாரிமார்களும் தேவையான இரும்புப் பாத்திரம், கருவிகள் கொடுப்பர். இவை படைக்கலம் வைத்தல் எனப்படும்.

பிறைமண் எடுத்தல் பேய்க் கரும்பு நாட்டல்

  குலதெய்வக் கோயிலுக்குச் சென்று புற்றுமண் கொண்டு வர இயலாது ஆகையால் அருகில் உள்ள புற்றுக்கு அருமைக்காரருடன் சென்று பால்வார்த்ததுப் பூசை செய்து மூன்று கூடைகளில் மண் எடுத்து வருவர். மங்கலன் ஆகிய குடிமகன் கல்நீக்கி மேடை போல அமைப்பான். அதில் பச்சை மூங்கிலையும் பேய்க்கரும்பு என அழைக்கப்படும் வேர்க்கரும்பினையும் நடுவான். அரசு இலையும் நவதானிய முடிச்சும் கட்டி அதற்குப் பூசை செய்வர். இது மண மேடையில் அமைக்கப்படும்.

  நாற்சதுர மேடை படைப்புக் கடவுளாகிய நான்முகனைக் குறிக்கும் என்பர். அதனால் இதனை பிரமத்தானம் அல்லது பிரம்மாவை எழுந்தருளச் செய்தல் என்பது பொருளாகும். கரும்பு வான் பயிர் எனக்குறிக்கப்பெறும் நன்செய்ப் பயிர்களில் முக்கியமானது, இனிமையுடையது.

  ஒரு காலத்தில் கொங்கு மன்னன் அதியமான கரும்புப் பயிரைத் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தினான் என்பது புறநானூற்றுச் செய்தி. அது மட்டுமல்ல கரும்பு மன்மதனின் வில்லாகவும் பயன்படுகிறது என்பர். இதற்காகவே கரும்பு நடப்படுகிறது.மங்கல வாழ்த்து,

 பேய்க்கரும்பை நாட்டிப் பிறை மண்ணும் தான்போட்டு’

  என்று கூறுகிறது. புற்று வணக்கத்திற்கு உரியது மாரியம்மன் தோற்றத்திலும் புற்று இடம் பெறுகிறது. வால்மீகி புற்றிலிருந்து வெளிப்பட்டார் என்பது வரலாறு. சில இடங்களில் சிவ பெருமான் புற்றிடங்கொண்டீசுவரர் என அழைக்கப்படுகிறார் 


காப்புக் கட்டுதல்



  மணமகனுக்கும், மணமகளுக்கும் காம்பு இல்லாத சிறு விறலி மஞ்சளை மஞ்சள் தோய்த்த நூலில் இணைத்து அருமைக்காரர் மணமகனுக்கு வலக்கையிலும், மணமகளுக்கு இடக்கையிலும் கட்டுவார். எந்த இடையூறு ஏற்படினும் மண நிகழ்வை இனிதே முடிப்பேன் என்பதற்காகவும், ஏற்படும் இன்னல்களிலிருந்து பாதுகாப்புக்காகவும் காப்புக் கட்டப்படுகிறது. மங்கல நாண் பூட்டிய பின்னரே இவை அவிழ்க்கப்பெறும். 

காப்புடன் கங்கணம் கனமதாய்க் கட்டி’ 


என்பது மங்கல வாழ்த்துத் தொடர்.


 ‘முங்கையில் கடிகை நூல் கட்டுதல்’ 


என்று நெடுநல்வாடையில் காப்புக் கட்டுதல் குறிக்கப்படுகிறது. மஞ்சள் கிருமி நாசினியாகும்.



புலவர் செ இராசு அவர்களின் கொங்கு வேளாளர் சீர்களும்,இலக்கியங்களும் என்னும் நூலிலிருந்து


 (தொடரும்)

No comments:

கொங்கு வேளாளர் குலங்கள்

(புலவர் செ.இராசு அவர்களின் நூலிலிருந்து }