எழுதிங்கள் சீர்
ஒரு பெண்ணின் மகனுககோ,மகளுக்கோ திருமணம் ஆகும் முன் தாய் வீட்டில் அல்லது தாய் வீட்டுச்செலவில் நடைபெறுவது எழுதிங்கள் சீர் .நல்ல நாள் பார்த்து அருமைக்காரரை அழைத்து மாலையில் முகூர்த்தக்கால் போடுவார்கள்.இந்நிகழ்வில் தொடர்ந்து சில அரிய சீர்கள் நடைபெறும்.
பொடச்சட்டி தூக்குதல்
ஒரு புதிய மண் பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றுவர். மண்பானை வாயிலில் குறுக்கும் நெடுக்குமாக மாங்குச்சிகளை வைப்பர்.அதன்மீது நீர்விட்டுப்பிசைந்த 5 படிதிணைமாவை,அம்மிக்குழவிபோல்உருவாக்கி, அதனை இரு கூறாகப் பிளந்து உள்ளே அச்சுவெல்லத்தை வைத்து மூடுவார்கள்.குச்சிகளின் மேல் மா உருண்டையை வைத்து மண்பானையை மூடுவர். இப்பானையைப் பெண்ணின் சகோதரர் தூக்கி அடுப்பில் வைப்பார். இதற்குப் பொடச்சட்டி தூக்குதல் என்று பெயர். பின்னர் அப்பானையை விடிய விடிய வேக வைப்பர் .திணை மா நன்றாக வேகும் வரை அடுப்பை எரிக்க வேண்டும்
.
குழவி எடுத்தல்
பச்சைப் பந்தலின் கீழ் எழுதிங்கள் சீர் செய்து கொள்ளும் பெண்ணை நீராட்டுவர்.அருகில் சுவர் ஓரம் மர உரல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும்.உரலின் பின் சீர்ப்பென்னை நிறுத்துவர்.பெண்ணின் சகோதரர் இலந்தை முல்லைக் குடை போல் தலைக்கு மேல் பிடித்து நிற்பார்.
நாவிதன் உழுபடைக் கொழுவைப் பழுக்கக் காய வைத்துப் பெண்ணின் அருகில் கொண்டு வந்து,அதன் மீது மோரை ஊற்றுவார்.அப்போது சட சட என்று சத்தம் வரும்.அப்போது சீர்ப் பெண் மர உரலைக் காலால் உதைத்துத் தள்ளிவிட்டு வீட்டினுள் செல்வாள்.அப்பெண்ணின் கணவனின் சகோதரி உரலில் வைக்கப்பட்டுள்ள குலவிக்கல்லை எடுத்துக்கொண்டு போய் சீர்ப்பெண்ணின் மடியில் வைப்பார்.இதற்கு குழவிஎடுத்தல் என்று பெயர்.
பின் அப்பெண்ணிற்கு புளிய ஆக்கை போட்டுத் தாண்டச்செய்து நீராட்டுவர்.விரதம் இருந்த சீர்ப் பெண், விரதம் முடிப்பாள்.பின் எல்லோருக்கும் விருந்தளிக்கப்படும்
கோதை மாவு பிளத்தல்
விடியுமுன் அதிகாலையில் புடச்சட்டி மாவை எடுத்து வாயிற்படிமீது வைப்பர். அருமைக்காரியும் சீர்ப்பெண்னும் கோடரியால் மா உருண்டையை இரு கூறாகப் பிளப்பர்.மா நடுவில் வைக்கப்பட்ட வெல்லம் கரையாமல் இருந்தால் குடும்பத்திற்கு நல்லது என்பர்.இதை கோதைமாவு பிளத்தல் என்பர்
மிடாச்சோறு தோண்டுதல்
சீர்ப் பெண்ணையும் அவள் கணவனையும் மணவறையில் அமரவைத்து மாலையிட்டு, பொட்டு வைத்து அருமைக்காரர் அருகுமணம் செய்வார்.பின் செஞ்சோறு அஞ்சடை சுற்றி எறிவர் ஆரத்தி எடுத்து நீர் விளாவுவார். சீர்ப்பெண் ஒரு மண்பானையில் சோறாக்கிக் கரண்டியால் எல்லோருக்கும் போட்டுத் தானும் உண்பாள்.இச்சீர் மிடாச்சோறு தோண்டுதல் என்பர். பின் சீர்ப்பெண் சீர்க்காரி ஆவாள். எல்லா மங்கலச் சீரிலும் பங்கு பெறும் தகுதியைப் பெறுவாள்.
சீர்க்கூடை கொடுத்தல்
இந்தச் சீரின் எல்லாச் செலவுகளையும் பெண்ணின் தாய் வீட்டாரே ஏற்றுக்கொள்வர்.சீர்ப்பெண் வீட்டார் அனைவருக்கும் புத்தாடை எடுத்துக் கொடுப்பர். நகைகள் அளிப்பதும் உண்டு.பெண்ணை அவள் வீட்டுக்கு அனுப்பும்போது சீர்க்கூடையில் அரிசி,பருப்பு,வெல்லம், தேங்காய்,பழம்,வெற்றிலை,பாக்கு, எலுமிச்சம்பழம் வைத்து அனுப்புவர்.பிள்ளையார் கோவிலில் வழிபட்ட பின்,சீர்ப்பெண்ணை அவளது வீட்டிற்கு அனுப்பி வைப்பர். . . . .
No comments:
Post a Comment